புத்ராஜெயாவை கைப்பற்ற விரும்பினால், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு தனது விமர்சகர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம், சவால் விடுத்துள்ளார். ஒரு தேசத்தை கட்டியெழுப்ப நேரம் எடுக்கும். ஆனால் “அதை இடிப்பது எளிது” என்று அவர் கூறினார். அரசாங்கத்தை வீழ்த்த விரும்புவோர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அது உங்கள் உரிமை, ஆனால் சரியான நடைமுறையைப் பின்பற்றுங்கள்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு போதுமான ஆதரவு இல்லையென்றால், பொதுத் தேர்தலுக்காகக் காத்திருங்கள். சாலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவோ அல்லது பொதுமக்களைத் தூண்டிவிடவோ வேண்டாம் என்று அவர் இன்று ஸ்டேடியம் பத்து கவானில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை வார கொண்டாட்டத்தில் கூறினார்.
தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங், பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்வாரின் ராஜினாமாவை வலியுறுத்துவதற்காக ஜூலை 26 ஆம் தேதி பெரிகாத்தான் நேஷனல் “Turun Anwar” என்ற வெகுஜன பேரணியைத் திட்டமிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஷா ஆலமில் நடந்த இதேபோன்ற போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதிலும் 300,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில சமயப் பிரமுகர்களின் குரல்கள் உட்பட வெறுப்பு குரல்களுக்கு பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அன்வார் அழைப்பு விடுத்தார். இருப்பினும், அவர் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. “பல சமய அறிஞர்கள் நேர்மையானவர்கள். நேற்று தான், இந்தோனேசியா, மொராக்கோ, சிரியா, இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்களைச் சந்தித்தேன், அவர்கள் அனைவரும் புத்திசாலித்தனமான ஆலோசனைகளை வழங்கினர். பினாங்கிலிருந்து, புத்ராஜெயாவில் உள்ள மஸ்ஜித் புத்ராவுக்கு மத ஆசிரியர்களின் கூட்டத்திற்காகச் செல்வேன். அவர்களின் ஆலோசனையையும் நான் கேட்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக, மலேசியா பிராந்தியத்தில் அமைதியான நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அன்வார் கூறினார், இது தனது சாதனை மட்டுமல்ல, அமைச்சகங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும் என்றும் கூறினார். அரசியல் ஸ்திரத்தன்மை முதலீட்டை ஈர்க்கிறது, முதலீடு பொருளாதார வளர்ச்சியை உந்துகிறது. அதனால்தான் பல உலகத் தலைவர்கள் மலேசியாவை உரையாடலுக்கான இடமாகத் தேர்வு செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, வளைகுடா நாடுகள், பிரேசில், தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர்கள் அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக அன்வார் தனது பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தாக்கல் செய்யுங்கள் : விமர்சகர்களிடம் அன்வார் சவால் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

