தாவாவ்:
சபா, தாவாவிலுள்ள கம்போங் ஸ்ரீ அமன் நீர் கிராமத்தில் (Water Village) நேற்று இரவு ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், பல வீடுகளும் அவற்றைப் படகுகள் இணைக்கும் பாலங்களும் அழிந்தன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பல குடியிருப்பாளர்கள் வேறு வழியின்றி கடலுக்குள் குதித்தனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 58 வயதுடைய லினி டாரோங் என்பவர், சம்பவம் குறித்துக் கண்ணீருடன் விவரித்தார்.
நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் கணவன், மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீடு எரிவதைக் கண்டு மகன் கூச்சலிட்டதால் விழித்தெழுந்தனர்.
“என்னுடைய கணவரால் நடக்கவோ பேசவோ முடியாது என்பதால், வேலை முடித்துத் திரும்பிய என் மகன் உடனே அவரைத் தூக்கி வெளியே கொண்டு சென்றான். நானும் சில முக்கிய ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மகனைப் பின்தொடர்ந்தேன். ஆனால், மகன் மற்ற உடைமைகளை எடுக்க மீண்டும் வீட்டிற்குள் சென்றதால், நான் திரும்பிச் சென்றேன்.”
“தீ மிக வேகமாகப் பரவி, பல வீடுகள் எரிவதைக் கண்டேன். எங்கள் வீட்டிற்கான பாலம் இடிந்து விழுவதைப் பார்த்ததும், நான் உடனடியாகக் கடலுக்குள் குதித்தேன்,” என்று லினி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மார்பளவு இருந்த தண்ணீரில் குதித்த லினி, தன் மகனை நோக்கி, “உடைமைகளை எல்லாம் கடலுக்குள் தூக்கிப் போடு” என்று சத்தமிட்டுள்ளார்.
மற்றொரு பாதிக்கப்பட்டவரான 57 வயதுடைய ஜானிங் ஜமலாங் கூறுகையில், கணவரின் அழைப்பைக் கேட்டுப் பதறியடித்துக்கொண்டு ஓடியதாகவும், அந்தப் பதட்டத்தில் அவரால் முக்கிய ஆவணங்கள் உட்பட எந்தப் பொருட்களையும் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார்.
“சூழ்நிலை சரியாக இல்லை என தான் புரிந்து கொண்டு, உடனே தனது ஒரு மாதக் குழந்தையை ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடியதாக சொன்னார்.
“அந்த நேரத்தில், மக்கள் கடலுக்குள் குதிப்பதையும், பலர் படகுகளில் இருப்பதையும் பார்த்தேன். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடம்பில் இருந்த ஆடையைத் தவிர வேறு எதுவும் மிச்சம் இல்லை என்றாலும், என் குடும்பம் பத்திரமாக இருக்கிறது, அதற்கு நான் நன்றி சொல்கிறேன்,” என்று கூறி, இச்சம்பவம் குறித்துக் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தில் சுமார் 30 பகுதி-நிரந்தர வீடுகள் முழுமையாக அழிந்துவிட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சுமார் 300 வீடுகள் இந்தத் தீ விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த குடியிருப்பாளர்கள் அனைவரும், அசல் இடத்திலேயே வீடுகளை மீண்டும் கட்டிக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், மறுசீரமைப்பிற்கான நிதி உதவியை வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட லினி மற்றும் ஜானிங் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, 200க்கும் மேற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைக்க, ஓர் அவசர வெளியேற்ற மையம் (Evacuation Centre) திறக்கப்பட்டுள்ளதாகத் தாவாவ் நலன்புரி அதிகாரி நூருல் ஃபாடிலா அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார்




