Last Updated:
ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து தீவிபத்தில் ரமேஷ் குடும்பம் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து தீவிபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி 41 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெக்கூர் என்ற கிராமம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதி அதன் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.
தீப்பற்றியதை உணர்ந்த பயணிகள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் 10-க்கும் மேற்பட்டோர் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியதால் பலர் வெளியேற முடியால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து கருகியது. பேருந்தின் அனல் முழுமையாக தணிந்தபிறகே, உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. பைக் மீது மோதியபோது உருவான தீப்பொறி காரணமாகவே, இந்த கோர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோக சம்வம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொள்ளவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (36) குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஹைதராபாத் சென்றிருந்த ரமேஷ் அவருடைய மனைவி அனுஷா (32) மகன் எஸ்வந்த்(8) மகள் மன்விதா (6) ஆகியோர் மீண்டும் பெங்களூரு சென்ற போது ஆம்னி பேருந்து தீவிபத்தில் சிக்கி உயரிழந்துள்ளனர்.
கடந்த 14ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் தீ பற்றி சுமார் 20 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
October 24, 2025 5:28 PM IST
தீபாவளி விடுமுறை முடிந்து ஊருக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆம்னி பேருந்து தீவிபத்தில் சிக்கி உயிரிழப்பு.. ஆந்திராவில் சோக சம்பவம்


