தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த குரும்பூர் பகுதியில் பெண்கள் பனை ஓலைகளைக் கொண்டு பல வகையான பொருட்களைச் செய்து வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவாக இவர்கள் பனை ஓலைகளைக் கொண்டு நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் செய்து வந்த இவர்கள் தற்போது சுயமாகக் கடை அமைத்து இந்தப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பலாப் பெட்டி, பழங்கள் வைக்கும் பெட்டி, நகைப் பெட்டி, புடவை பெட்டி, விசிறி, குழந்தைகளுக்கான கிலுக்கு போன்ற விளையாட்டுப் பொருட்கள், கல்லூரி பெண்களைக் கவரும் வகையில் வித விதமான கீ செயின்கள், பனை மாலை, பொக்கே போன்ற பல பொருட்களைச் செய்து வருகின்றனர்.
இந்த பொருட்களில் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப தீபாவளிக்கு ஸ்வீட் கொடுக்கும் வகையிலான பெட்டிகள் செய்து வழங்குகின்றனர். இந்த பலகாரப் பெட்டிகளை கார்ப்ரேட் அலுவலக ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வாங்கிச் செல்வதாகத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பூக்கும் தாவரம்… அரிய மலரைக் காண ஆர்வம் காட்டும் பயணிகள்…
இது குறித்து கிரேஸ் ஜூலியட் டயானா கூறுகையில், “மல்லிகை பனைப் பொருள் அங்காடி நடத்தி வருகிறோம். இதில் அனைத்து வகையான பனைப் பொருட்களையும் கை வேலைப்பாடுகளால் செய்து வருகிறோம். நாங்கள் முதலில் மகளிர் சுய உதவிக் குழு மூலமாகத்தான் இந்த பனைப் பொருட்கள் செய்வதைத் தொடங்கினோம்.
அதன் பிறகு தனியாகக் கடைகள் வைத்து மற்ற பெண்களுடன் சேர்ந்து செய்து வருகின்றோம். நாங்கள் அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்கின்றோம் மற்றும் மக்களை ஈர்க்கும் வகையில் பனை மாலை, பனை ஓலையில் கீ செயின் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றோம்.
இப்போதெல்லாம் குடும்பத்தில் ஆண், பெண் இருவரின் சம்பாத்தியமும் தேவையாக இருக்கின்றது. இந்த பனைப்பொருட்கள் செய்வதன் மூலம் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும் அன்றாடத் தேவைக்குப் பயன்படுகின்றது. இதனைச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு ஆளுக்கு ரூ.300 வரை வருமானம் கிடைக்கின்றது.
இதையும் படிங்க: 5 லட்சம் மரம் நட்டு பராமரிக்கனும்… மகன் நினைவாக மலையையே பசுமையாக்கும் தந்தை…
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பனை ஓலையால் தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் செய்து வருகின்றோம். 3:3 இன்ச் அளவிலிருந்து 9:5 இன்ச் அளவு வரை நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் செய்து தருகிறோம். மேலும் இந்த ஸ்வீட் பாக்ஸில் மக்களைக் கவரும் வகையில் ஓலைகளில் சாயம் பூசி, மல்டி கலர்களிலும் செய்து தருகின்றோம்”எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
