Last Updated:
கிரெடிட் கார்டுகளை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் பயன்படுத்துவதால், எதிர்பாராத கடன் அபராதங்கள் மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இந்த வருட தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வங்கிகள், பல்வேறு பிராண்டுகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் ஷாப்பிங் செய்பவர்களை ஈர்ப்பதற்காக வெவ்வேறு பண்டிகைக் கால கிரெடிட் கார்டு டீல்களை வழங்கி வருகின்றன. கேஷ்பேக் மற்றும் டிஸ்கவுன்ட்கள் முதல் ஜீரோ காஸ்ட் EMIகள் மற்றும் ஃபிளாஷ் சேல் போன்ற எக்கச்சக்கமான தீபாவளி ஆஃபர்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், கிரெடிட் கார்டுகளை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் பயன்படுத்துவதால், எதிர்பாராத கடன் அபராதங்கள் மற்றும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எனவே, இந்த பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்வதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
ஜீரோ காஸ்ட் EMIகள் என்றால் அதற்கு எந்தவொரு வட்டியும் செலுத்த தேவையில்லை என்பது பலருடைய நம்பிக்கை. ஆனால், உண்மையில் ஒரு பொருளுக்கான விலையை அதிகரித்து அல்லது பிராசசிங் கட்டணங்கள் போன்ற மறைமுக கட்டணங்கள் இதில் அடங்கி இருக்கின்றன. பார்ப்பதற்கு ஈர்க்கக்கூடிய ஒரு ஆஃபராக இருந்தாலும், ஒரு தவணையை நீங்கள் செலுத்த தவறினால்கூட அதற்காக நீங்கள் பெரிய அளவில் அபராதங்களை செலுத்த வேண்டும். எனவே, EMIகளுக்கு செல்வதற்கு முன்பு உண்மையில் ஒரு ப்ராடக்டுக்கான விலை என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஒரே ஒரு பேமெண்டை நீங்கள் செலுத்த தவறினால்கூட அந்த பேமெண்டை தாமதமாக செலுத்தியதற்கான கட்டணங்கள் உட்பட 30 முதல் 45 சதவீத வட்டி விகிதத்தையும் நீங்கள் சேர்த்து செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இது பல வருடங்களுக்கு உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு லோன் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், கிரெடிட் கார்டுக்கு குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்தி வருவதால் உங்களுடைய வட்டியானது தொடர்ந்து அதிகரித்துவரும். ஆகையால், முழு டியூ தொகையையும் சரியான நேரத்தில் செலுத்துவது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.
பண்டிகைக் கால சலுகைகளைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, அளவுக்கு மீறி கிரெடிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. உங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த லிமிட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக நீங்கள் பயன்படுத்தினால் கூட அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். ஒருவேளை நீங்கள் பெரிய அளவிலான ஷாப்பிங் செய்யப் போகிறீர்கள் என்றால் அந்த பேமெண்டை உங்களுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது UPI ஆகிய பேமெண்ட் முறைகள் இடையே பகிர்ந்து செலுத்துவது புத்திசாலித்தனம்.
தீபாவளி சலுகைகள் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுவது உண்டு. எனவே, ஒரு பொருளுக்கான விலையை நீங்கள் பல்வேறு ஆன்லைன் வெப்சைட்டுகள் மற்றும் நேரடியாக கடைகளுக்கு சென்று சரிபார்த்த பிறகே அந்த பொருளை வாங்க வேண்டும். சலுகையில் கிடைக்கிறதே என்பதற்காக அவசியம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.
கிரெடிட் கார்ட் பயன்படுத்தி கேஷ் வித்டிரா செய்வது சௌகரியமானதாக இருந்தாலும், இதற்கான வட்டி என்பது நீங்கள் பணத்தை எடுத்த நாளில் இருந்து ஆரம்பிக்கும். மேலும் இந்த பணப்பரிமாற்றத்திற்கு கட்டணமாக 3 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, அவசர கால சூழ்நிலைகள் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கேஷ் வித்டிரா செய்ய வேண்டாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
October 15, 2025 3:43 PM IST
தீபாவளிக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்யப் போறீங்களா…? இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க…!


