கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை ஆராய்வதே இக்குழுவின் நோக்கம் என்றும் அதற்காக ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரைக்கும் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.
இதனிடையே மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

