தில்லியில் முதுகலைப் பட்டதாரியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஷாவைச் சேர்ந்த சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்று, 8 ஆண்டுகளாக சமூகப்பணி ஆற்றிவந்த பெண் ஒருவர், கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த மே மாதத்தில் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், தில்லிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ஜூன் 9 ஆம் தேதியில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், அக். 10 ஆம் தேதியில் தில்லி ரயில் நிலையத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த பிரமோத் பாபு என்பவர், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க, அங்கிருந்த மாற்றுத் திறனாளியான பிச்சைக்காரர் முகமது ஷம்சுலையும் குற்றச்செயலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தினைக் கண்ட பிரபு மஹ்தோ என்பவரும் சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், சராய் காலேகான் பகுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

