புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
தில்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கடும் குளிா் நிலவி வருகிறது. நகரம் முழுவதும் மூடுபனி சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். காண்புதிறன் குறைந்ததால் விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்படுகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட அடா்ந்த மூடுபனி, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் காண்பு திறன் குறைவாக இருந்ததன் காரணமாக பல விமானங்கள் தாமதமாகின. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் தாமதமாகின.
இதற்கிடையே, நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

