Last Updated:
கொலை செய்வது எப்படி என்று யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்துள்ளார் மனைவி. காதில் விஷம் ஊற்றி. கொலை செய்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள கிசான் நகரைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ரமாதேவி. சம்பத், கரீம் நகர் மாவட்ட நூலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பத் மது போதையில் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததோடு, அடிக்கடி தனது மனைவியை அடித்து செலவுக்கு பணம் கேட்டு துன்புறுத்தி இருக்கிறார்.
குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக ரமாதேவி தோசை மாவு விற்பனை செய்து வந்தார். அப்போது அவரிடம் மாவு வாங்க அடிக்கடி வரும் ராஜய்யா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது கணவனை கொலை செய்து விட்டு, கள்ளக்காதலுடன் மகிழ்ச்சியாக வாழ திட்டம் போட்டுள்ளார் ரமாதேவி. இதற்காக யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலை செய்வது எப்படி என்பதை யூடியூப் வீடியோ மூலம் பார்த்தும் இருக்கிறார்.
அப்போது மனிதர்களின் காதில் பூச்சி மருந்தை ஊற்றினால் இறந்து விடுவார்கள் என்று அவருக்கு ஒரு youtube வீடியோ மூலம் தெரிய வந்தது. இது பற்றி தனது காதலன் ராஜய்யாவிடம் கூறிய ரமாதேவி கணவன் இறந்தபின் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவருக்கு தூபம் போட்டுள்ளார். ரமாதேவியின் திட்டத்திற்கு ராஜய்யாவும் ஒப்புக்கொண்டுள்ளார். ராஜய்யா தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடன் சேர்ந்து, மது அருந்தலாம் என்று சம்பத்தை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்து சென்றார்..
பொம்மகல் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சம்பத்துடன் சேர்ந்து அவர்கள் மது அருந்தி உள்ளனர். சம்பத் மது போதையில் தள்ளாடி அங்கேயே படுத்துக் கொண்டார். அப்போது சம்பத் காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி இருக்கிறார் ராஜய்யா. காது ஜவ்வு மூலம் பூச்சி மருந்து உறிஞ்சப்பட்டு அது ரத்தத்தில் கலந்து சம்பத் இறந்தவுடன், ராஜய்யா ரமாதேவிக்கு போன் செய்து மேட்டர் சக்சஸ், ஆள் அவுட் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார்
மறுநாள், கணவரை காணவில்லை என்று மகன் பரத் மற்றும் ராஜய்யாவுடன் சேர்ந்து ரமாதேவி தேடுவது போல் நடித்துள்ளார். இந்த நிலையில், சம்பத்தின் உடல் உடல் கிடைத்ததாக அவர்களே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் சம்பத் – ரமாதேவி தம்பதியின் மகன் பரத் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது ரமாதேவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ரமாதேவி செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது ராஜய்யாவிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. ரமாதேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அனைத்து சம்பவங்களையும் போலீசிடம் தெரிவித்து இருக்கிறார். கொலையை தாங்களே செய்ததாக ரமாதேவி ஒப்புக்கொண்ட நிலையில், ரமாதேவி, ராஜய்யா மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தார். கொலைக்கு பயன்படுத்திய பூச்சிகொல்லி மருந்தையும் அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். யூடியூப் பார்த்து காதில் விஷம் ஊற்றி கணவனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது
August 11, 2025 5:15 PM IST


