Last Updated:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமண பிரசாத் என்பவர் தங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக பக்தர்கள் சிலர் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், ரமண பிரசாத்தைப் பிடித்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனியார் மென்பொருள் நிறுவன முன்னாள் ஊழியரான ரமண பிரசாத், தொடக்கத்தில் ஏழுமலையான் கோயில் லட்டு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
தொடர்ந்து, ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகளை போலியாக தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும், இதன்மூலம் அவர் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்ததும் அம்பலமானது.
ரமண பிரசாத்திடம் போலி டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு செல்லும்போது தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரமண பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கள்ள சந்தையில் தரிசன டிக்கெட் விற்றதாக 12 வழக்குகள் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
February 22, 2025 5:08 PM IST


