Last Updated:
அலுவலக அறையில் உள்ள கழிவறையில் மயக்க நிலையில் அசைவற்று கிடந்ததாக கூறப்படுகிறது.
திரிபுரா மாநில டிஜிபி பணியின்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி, குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர் உ1994 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், எஸ்.பி., ஐ.ஜி. என படிப்படியாக உயர்ந்து காவல் துறையில் ஒரு மாநிலத்தின் உச்ச பொறுப்புக்கு வந்தவர். கடந்த 2025 மே மாதம் முதல் திரிபுரா மாநிலத்தின் டிஜிபி ஆக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் அகர்தலாவில் உள்ள காவல் துறை தலைமையகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு. தனது அறையில் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தார். நண்பகல் 12 மணியளவில் அலுவலக அறையில் உள்ள கழிவறையில் மயக்க நிலையில் அசைவற்று கிடந்ததாக கூறப்படுகிறது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள கோவிந்த் வல்லப் பந்த் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இருந்தபோதும் சிபிஆர் கொடுத்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், அது எதுவும் பலனளிக்காததால் 12:48 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பினர். உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் தான் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. திரிபுரா மாநிலத்தின் பல்வேறு வழக்குகளை அனுராக் தன்கர் விசாரித்த நிலையில், அவர்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு எதாவது காரணத்திற்காக அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பணியில் இருந்த டிஜிபி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் திரிபுரா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


