Last Updated:
மேற்குவங்கம் பங்காரில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ரஃபிகுல் இஸ்லாம் வீட்டில் 100 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி குற்றச்சாட்டு.
மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெருமளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் சூழலில், முதல்கட்டத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பெருமளவில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்காரில் உள்ள ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் இந்த வெடிகுண்டுகள், அரசியல் மோதலைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தேர்தல் தொடர்பான வன்முறை குறித்த அச்சங்களையும் எழுப்பியுள்ளது.
பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில், “பங்காரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ரஃபிகுல் இஸ்லாமின் வீட்டில் இருந்து 100 வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன” என்று ஆளும் கட்சியைக் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். தகவல்களின்படி, “கொல்கத்தா காவல் ஆணையர், அனைத்து துணை காவல் ஆணையர்கள், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரி (OC) மற்றும் புலனாய்வு அதிகாரி (IC) வரையிலான அனைத்து அதிகாரிகளுக்கும் கடுமையான செய்தி விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, தங்களது அதிகார வரம்பில் இதுபோன்ற வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டாலோ அல்லது யாரேனும் இதுபோன்ற அச்சுறுத்தும் தந்திரங்களைப் பயன்படுத்தினாலோ, சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரி/புலனாய்வாளர் முன்னெப்போதும் இல்லாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, இதுபோன்ற அனைத்து அச்சுறுத்தும் பொருட்களும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தவறாமல் பறிமுதல் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று காலை ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 93 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், அடுத்த சுற்றில் அமைதியான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய அழுத்தத்தில் அதிகாரிகள் உள்ளனர்.


