புதுடெல்லி,குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஆண்டு ஜீன் மாதம் 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், பொதுமக்கள் சிலர் என 260 பேர் பலியானார்கள். விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.
விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கு விமானிகளின் கவன குறைவுதான் காரணம் என இத்தாலி நாட்டை சேர்ந்த நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. முன்னதாக விமான விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால்தான், என்ஜின் ஆப் ஆகி பின்னர் விபத்து ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இந்த சுவிட்ச் தானாக ஆப் ஆகாது. அப்படியெனில் விமானிகளில் யாராவது ஒருவர் வேண்டும் என்றே சுவிட்சை ஆப் செய்திருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. இந்த சூழலில் சமீபத்தில் லண்டனிலிருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் புறப்படும்போது இதேபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டது.
விமானிகள் என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் சுவிட்சை ஆப் செய்யவில்லை. ஆனால், சுவிட்ச் தானாக ஆப் ஆகியிருந்தது. ஆமதாபாத் விபத்தில் சிக்கிய விமானமும் இதே ரகம்தான். எனவே இந்த ரகத்தில் உள்ள விமானங்களில் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் விபத்துக்கு விமானிகள்தான் காரணம் என்று இத்தாலி நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி , விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அல்லது வெளிப்புற சதியின் காரணமாக ஏற்படவில்லை என்று தெரிகிறது. காக்பிட்டில் இருந்த ஒரு விமானியின் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலால் (Deliberate Act) நிகழ்ந்தது , என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 787 டிரீம்லைனர். இது அமெரிக்க தயாரிப்பு விமானம் என்பதால், விபத்து குறித்த அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆய்வை தொடங்கினர். இதன்படி என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் சுவிட்ச் தானாக ஆப் ஆகிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள, செயற்கையான சூழலை உருவாக்கி சோதித்தனர். அதில், என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகவில்லை. கைகளால் ஆப் செய்யப்பட்டால் மட்டுமே ஆப் ஆனதாக கூறப்படுகிறது
மேலும் வாஷிங்டனில் உள்ள ஆய்வகத்தில் வைத்து, கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்பட்டது. அதில், இந்த சுவிட்ச் ரன் நிலையிலிருந்து கட்-ஆப் நிலைக்கு மாற்றப்பட்டதை மில்லி செகண்ட் துல்லியத்துடன் கண்டறிந்தனர். இந்த ஆய்வில், சுவிட்ச் தானாக ஆப் ஆக வாய்ப்பு இல்லை என்பதை கண்டுபிடித்தனர். அப்படியெனில் யார் சுவிட்சை ஆஃப் செய்தது? என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கேப்டன் சுமீத் சபர்வால் தான் சுவிட்சை ஆப் செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர் விவாகரத்து உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் இதை செய்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை தான், இத்தாலி செய்தி நாளிதழும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து இந்திய விமானத்துறையும், போக்குவரத்துதுறை அமைச்சகமும் எந்தவொரு கருத்தும் கூறவில்லை. அது, வரும்போதுதான் உண்மையான விபத்துக்கான காரணம் தெரிய வரும்.




