தாவாவ்:
கம்போங் தித்திங்கானில் நேற்றுக் காலை சுமார் 40 வீடுகளைச் சாம்பலாக்கிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் அளிக்க, தாவாவ் விளையாட்டு வளாகப் பொது மண்டபத்தில் (Dewan Serbaguna Kompleks Sukan Tawau) மாலை 5 மணியளவில் நிவாரண மையம் திறக்கப்பட்டது.
தற்போது மொத்தம் 70 குடும்பங்களைச் சேர்ந்த 310 பேர் இந்த விபத்தினால் வீடுகளை இழந்து, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 104 ஆண்கள், 102 பெண்கள், 50 சிறுவர்கள் மற்றும் 54 சிறுமிகள் அடங்குவர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என்று, மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் முகமட் ஷோஃபியன் முகமட் சைட் தெரிவித்தார்.
இந்த விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தாவாவ் பகுதியை ‘தீ பேரிடர் பகுதியாக’ (Fire Disaster Area) அறிவித்துள்ளார்.
சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கி வருகின்றன. மீட்புப் பணியாளர்கள் இன்னும் களத்தில் இருந்து சேத விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.




