தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.15இல் தொடங்காது.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?
முதலமைச்சர் விஜய் வரும் 15ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த திட்டம் தள்ளி போவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது தவெக சார்பில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியமான ஒரு வாக்குறுதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் , அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் என்ற முறையில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது பெரும் விவாத பொருளானது.
செப்டம்பர் 15ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்டாலும், முதலமைச்சர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தில் இலவசமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த சூழலில் செப்டம்பர் 15இல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைக்கப்படாது என அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த வெளிநாட்டு பயணம் காரணமாக செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளி போவதாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் பிரிட்டன் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பி பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் முறையான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தனது பேட்டியில் கூறியுள்ளார். எனவே செப்டம்பர் 15ஆம் தேதி திட்டம் தொடங்கப்படாது என்பது அதிகாரப்பூர்வமாகவே தெரிய வந்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை எடுத்த நிறுவனங்கள் தங்க மோதிரங்களை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கியுள்ளன.
இந்த திட்டத்தில் கர்ப்பிணிகள் விண்ணப்பம் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. இத்திட்டத்தின் மிக முக்கியமான தகுதி, குழந்தை அரசு மருத்துவமனைகளில் பிறந்திருக்க வேண்டும். குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்து PICME எண் பெற வேண்டும். அதன் மூலமாகவே இத்திட்டத்திற்கான விவரங்களும் தானியங்கி முறையில் சேகரிக்கப்படும். குழந்தை பிறந்தவுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகமே குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்களை பெற்று இத்திட்டத்திற்கு பதிவு செய்யும். எனவே விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

