Last Updated:
தெலங்கானா ஜெய்சங்கர் பூபாலபள்ளி ரேப்பாக்கில் ரகசிய உறவு வைத்த தந்தை குர்ரே சேரலுவை மகன்கள் ராம் லக்ஷ்மன் அடித்து கொலை செய்த வழக்கில் இருவரும் கைது
தெலங்கானா மாநிலத்தில் தாயை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த தந்தையை பெற்ற மகன்களே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள ரேப்பாக்க கிராமத்தைச் சேர்ந்த குர்ரே சேரலு என்பவர் மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவருடைய மகன்களான ராம், லக்ஷ்மன் இருவரும் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மனைவி சுலோக்சனா, அவரது மகன்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சேரலு அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகன்களுக்குத் தெரியவர, தந்தையைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். தாயை தனியாகத் தவிக்க விட்டு வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகக் கூறி சண்டை போட்டுள்ளனர். அதற்கு அவர் “நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். அதை யாரும் கேட்க கூடாது” எனப் பதிலுக்கு அவர் மகன்களைக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகன்கள் ராம், லஷ்மன் இருவரும் நேரில் புறப்பட்டுச் சென்று தந்தையிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது பெற்ற தாயை ஏளனமாக பேசியதால் ஆத்திரம் அடைந்த இருவரும், தந்தையை மிக கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சேரலு அங்கேயே மயங்கி விழ, உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ராம், லக்ஷ்மன் இருவரையும் கைது செய்தனர். தாயை தனியாக தவிக்க விட்டு மற்றொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்ததால் தந்தையை கொலை செய்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தனர். தொடர் விசாரணை நீடித்து வரும் நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்ற தந்தையை மகன்களே அடித்து கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


