கோத்தா பாரு | சனி, 21 மார்ச் 2026:
புக்கிட் புங்கா அருகே நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்திற்குத் தங்கள் துறை வாகனமே காரணம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை கிளந்தான் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4:30 மணியளவில், ஜாலான் கோத்தா பாரு-மாச்சாங்-ஜெலி (KM 85.5) சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஈப்போவிலிருந்து ரந்தாவ் பாஞ்சாங் நோக்கிச் சென்ற 25 வயது மதிக்கத்தக்க முர்ஷித் அஸ்மி என்பவரது கார், திடீரென எதிர்த் திசையில் வந்த JPJ-வின் SUV ரக வாகனத்தின் வலது பக்கத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முர்ஷித் அஸ்மி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் அஸ்ட்ரோ அவானி (Astro Awani) மூத்த ஆசிரியர் ஹுஸ்னா யூசோப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் 34 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், JPJ அதிகாரிகள் ஒரு லோரியைத் துரத்திச் சென்றதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பதிவிடப்பட்டிருந்தது.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிளந்தான் JPJ இயக்குனர் முகமட் மிசுவாரி அப்துல்லா, “எங்கள் அதிகாரிகள் லோரியைத் துரத்தியதால் தான் விபத்து ஏற்பட்டது என்ற வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அது முற்றிலும் ஆதாரமற்றது. அந்தச் சமயத்தில் அந்த வாகனம் ‘ஒப்ஸ் ஹரி ராயா ஐடில்பித்ரி 2026’ (Ops Hari Raya Aidilfitri 2026) நடவடிக்கையின் கீழ் முறையான ரோந்துப் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தது” என்று அவர் சொன்னார்.
அதிகாரிகள் தங்களது பணியின் போது அனைத்துப் போக்குவரத்து விதிகளையும் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் (SOP) முறையாகப் பின்பற்றியதாக இயக்குனர் உறுதிப்படுத்தினார்.
காவல்துறை விசாரணை: தற்போது இந்த வழக்கு காவல்துறையின் விசாரணையில் உள்ளதால், பொதுமக்கள் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் JPJ தெரிவித்துக் கொண்டுள்ளது.
தற்போது காவல்துறையினர் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




