Singapore Maid News: தன் வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணை ஆடவர் ஒருவர் பெல்ட்டால் அடித்தும், தரையில் இழுத்தும் துன்புறுத்தியதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது.
பணிப்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, கன்னத்தில் அறைந்து, பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய 62 வயதான ஆடவருக்கு நேற்று புதன்கிழமை (ஜூன் 11) மூன்று மாதங்கள் மற்றும் பத்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு S$1,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
நடந்த சம்பவம் என்ன?
2022 ஜூலை 13, அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியால் பாதிக்கப்பட்ட பணிப்பெண் வீட்டு வேலைக்கு எடுக்கப்பட்டார்.
அரசு தரப்பு அறிக்கையின்படி 2022 செப்.1, அன்று, பணிப்பெண் வீட்டில் இருந்தபோது, பாலியல் ரீதியான தகாத வார்த்தைகளை ஆடவர் பேசியதாக சொல்லப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த பணிப்பெண், “ஏன் உங்க மனைவியுடன் இதை நீங்கள் செய்ய வேண்டியது தானே?” என்றார். அதற்கு அவள் (மனைவி) “நீண்ட நாளாகவே” இவ்வாறு செய்வதில்லை என்று ஆடவர் பதிலளித்தார்.
முஸ்லிம் சட்டத்தின் கீழ், தனது கணவர் அல்லது உறவினரைத் தவிர வேறு யாரையும் தொட அனுமதி இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பணிப்பெண் பதிலளித்தார்.
மேலும், “என்ன நடந்தாலும் அது உனக்கும் எனக்கும் மட்டுமானது”, இதை பற்றி என் மனைவியிடம் கூற கூடாது என்று ஆடவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பயந்துபோன பணிப்பெண், ஆடவர் தன்னிடம் சொன்னதை அப்படியே அவரது மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு “நீ செய்தது சரிதான்” என்று அவரது மனைவி பாராட்டி கூறினார்.
பின்னர் 2022 செப். 3 அன்று, மனைவி படுக்கைக்குச் சென்றபோது ஆடவர் அவரை நெருங்கினார். ஆனால் மனைவி அவரை நெருங்கவிடவில்லை.
பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ”வேலைக்காரியை தொந்தரவு செய்யாதே” என்று மனைவி கூறினார்.
பின்னர் கோபத்தில் பணிப்பெண்ணிடம் சென்ற ஆடவர், முகத்தில் அறைந்து, தரையில் இழுத்துச் சென்று, தலையிலும் முதுகிலும் ஐந்து முறைக்கு மேல் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் பணிப்பெண்ணை கட்டிபிடித்து தடுத்து அவரது மனைவி காப்பாற்றினார்.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆடவருக்கு மேற்சொன்ன தண்டனை வழங்கப்பட்டது.
ஆடவர் முன்னர் 2013 ஆம் ஆண்டு மிரட்டல் தொடர்பான வழக்கில் சிறை சென்றவர் என்பது கூடுதல் தகவல்.
Photo: Louis Ng Kok Kwang / Facebook

