ஐபிஎல் 2021 தொடரில், அக்.7 நடைபெற்ற டபுள் ஹெட்டர்ஸ் இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்து கொல்கத்தா மெகா வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை 99.99 சதவிகிதம் உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில், அக்.7 நடைபெற்ற டபுள் ஹெட்டர்ஸ் இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில், கொல்கத்தா நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான், பரிதாப நிலையில் ஆல் அவுட்டாகி இருக்கிறது.
ஷார்ஜாவில் நடைபெற்று இப்போட்டியில், கொல்கத்தா அணி, மிக மிக நிதானமாக ஆட்டத்தை துவக்கியது. பிளே ஆஃப் முன்னேற வேண்டுமெனில், இப்போட்டியில் கொல்கத்தா கண்டிப்பாக வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதால், தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஒவ்வொரு பந்தையும் கவனமாக கையாண்டனர்.
வெங்கடேஷ் ஐயர் 35 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிறகு களமிறங்கிய நிதிஷ் ராணா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தாலும் 12 ரன்களில் அவர் வெளியேறினார்.
பிறகு திரிபாதி 21, தினேஷ் கார்த்திக் 14, மோர்கன் 13 என்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தனித்து நின்று ஆடிய ஷுப்மன் கில் 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். போதாத குறைக்கு ராஜஸ்தான் 17 எக்ஸ்டராக்களை வாரி வழங்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.
இதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஷகிப் ஓவரில் போல்டாக, லிவிங்ஸ்டன் 6 ரன்களில் ஃபெர்கியூசன் பந்தில் கேட்ச்சானார்.
பிறகு, கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 1 ரன்னில், ஷிவம் மாவி ஓவரில் கேட்ச்சாக, இளம் வீரர் அனுஜ் ராவத் முதல் பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார். பிறகு க்ளென் ஃபிலிப்ஸ் 8 ரன்களில் மாவி ஓவரில் போல்டாக, 33 ரன்களுக்கெல்லாம் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான்.
‘என்னடா இப்படி ஆச்சே!’ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஷிவம் துபேவை 18 ரன்களில் போல்டாக்கினார் ஷிவம் மாவி. அதாவது ஷிவம் vs ஷிவம். ஆறாவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். இதன் பிறகு, எங்கிருந்து அந்த அணி எழுவது.
முடிவில், 16.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 85 ரன்கள் மட்டும் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஒரே ஆறுதலாக, தெவாட்டியா மட்டும் 44 ரன்கள் எடுத்தார். இதனால், 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது கொல்கத்தா.
இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா 14வது புள்ளியைப் பெற்றது. அதுமட்டுமின்றி, தனது ரன் ரேட்டை +0.59 என்று தாறுமாறாக உயர்த்தியது. இதனால், நாளை நடைபெறும் போட்டியில், ஹைதராபாத் அணியை மும்பையை வீழ்த்தினாலும் 14 புள்ளிகள் பெறலாமே தவிர, கொல்கத்தாவின் ரன் ரேட்டை மும்பையால் முந்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
ஸோ, ஐபிஎல் 2021 தொடரை விட்டு மும்பை வெளியேறுவது ஏறக்குறைய உறுதி. அதாவது, 99.99% உறுதி. இதை இப்படியும் சொல்லலாம். நான்காவது அணியாக கேகேஆர் பிளே ஆஃப் நுழைந்தது என்று!.