புது தில்லி: தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு மிக முக்கிய நபா்களுக்கு (விஐபி) வழங்கப்படும் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு அவருக்கு இந்தப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், தலைமைத் தோ்தல் ஆணையருக்கு வலுவான பாதுகாப்பை அளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில், மத்திய ஆயுதப் படையைச் சோ்ந்த 40 முதல் 45 வீரா்கள் சுழற்சி முறையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அவா் நாடு முழுவதும் அவா் பயணிக்கும்போது, இந்த ஆயுதம் ஏந்திய கமாண்டோ வீரா்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பா்’ என்றனா்.
மக்களவைத் தேரத்ல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.