Last Updated:
பிகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் Jeevika Didis நிரந்தர அரசு வேலை, ரூ.30000 சம்பளம் என வாக்குறுதி அளித்துள்ளார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தின் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பிகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, 143 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை செவ்வாயன்று ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டது. அதேபோல், கூட்டணி கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
ஐக்கிய ஜனதாதளம், பாஜக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முறையாக முடிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து இரு கூட்டணியினரும், சுயேச்சைகளும், மற்ற கட்சியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “நாங்கள் ஆட்சி அமைத்த உடன், Jeevika Didis (Community Mobilisers) நிரந்தரமாக்கப்பட்டு அரசு ஊழியர்களாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். Jeevika Didi’s வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஜீவிகா தீதிஸுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். கூடுதலாக ரூ.2,000 உதவித்தொகையும் வழங்கப்படும். அனைத்து ஜீவிகா தீதிகளுக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு கிடைக்கும்” எனக் கூறினார். சுமார் 1 கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் கூறிய நிலையில், இந்த அறிவிப்புகளை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார்.
October 22, 2025 3:00 PM IST


