
ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க தரைப்படைத் தாக்குதல் அவசியமில்லை என்றும், வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமே வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் கடந்த இரண்டு நாட்களாக ஜி7 நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுடன், சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் மத்திய வெளிவிவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கரும் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் முக்கிய பேசுபொருளாக மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் அமைந்தன. குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவமான ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மார்கோ ரூபியோ, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்து மிக முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். ஈரானின் அணு ஆயுதக் கனவுகளை முறியடிப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டின் கடற்படை, விமானப் படை மற்றும் ஏவுகணைத் தளங்களை அமெரிக்கா தொடர்ந்து குறிவைத்து அழித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்த ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற அமெரிக்க தரைப்படையைச் களமிறக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், நவீன தொழில்நுட்பம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலமே ஈரானின் ராணுவத் திறனை முழுமையாக முடக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மார்கோ ரூபியோ இவ்வாறு கூறினாலும், கள நிலவரப்படி அமெரிக்கா தனது படைகளைக் குவிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது விமானப் படைப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களுடன், கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கூடுதல் படையில் கவச வாகனங்கள் மற்றும் நவீன பீரங்கிகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது. அதே சமயம், ஈரான் மீது நடத்தப்பட வேண்டிய தாக்குதல்களை ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், சில வாரங்களிலேயே இந்த மோதல் ஒரு முடிவுக்கு வரும் என ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

