Last Updated:
மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில், ஆர்.எஸ். தமானி பள்ளியில் 5-10ஆம் வகுப்பு மாணவிகளின் சீருடையை களைந்து மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் சீருடையைக் களைந்து அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா என பள்ளி நிர்வாகம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில், ஆர்.எஸ். தமானி எனும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியின் கழிவறையில் கடந்த 8ஆம் தேதி ரத்தக் கறைகள் இருந்துள்ளன. இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்குக் தெரியவந்ததும், அதிர்ச்சிகர சம்பவத்தை ஒட்டுமொத்தப் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து செய்துள்ளது.
கழிவறையில் ரத்தக் கறை இருந்ததும், உடனடியாக பள்ளி நிர்வாகம், அந்தப் பள்ளியில் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளைப் பள்ளியின் கன்வென்ஷன் அறைக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் ரத்தக் கறை இருந்த புகைப்படங்களை புரோஜெக்டர் மூலம் காட்சிப்படுத்தி, மாணவிகளில் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது மாதவிடாய் இருக்கும் மாணவிகளின் கட்டைவிரல் ரேகையை வாங்கியுள்ளனர். தொடர்ந்து மாதவிடாய் இல்லை எனத் தெரிவித்த சிறுமிகளை ஒவ்வொருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் சீருடையைக் களைந்து பரிசோதித்துள்ளனர்.
இது குறித்து சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புதன்கிழமை சிறுமியின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெற்றோரிடம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியர்கள், உதவியாளர் மற்றும் இரண்டு அறங்காவலர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த காவல்துறையினர், இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரையும், மாணவிகளை கழிவறையில் வைத்து சீருடையை களைத்து சோதனையிட்ட பெண் உதவியாளரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கழிவறையில் ரத்தக் கறை இருந்ததன் காரணமாக சிறுமிகளின் சீருடைகளைக் களைந்து சோதித்துப் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.
July 10, 2025 7:32 PM IST