Last Updated:
ஏர் இந்தியா விமானத்தில் இறந்துபோன பயணி தனது இருக்கை பெல்ட்டை அவிழ்க்காமல் இருப்பதை பார்க்கும்போது, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) டெல்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் (AI2845) லக்னோவில் தரையிறங்கியபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், விமானத்தில் பயணித்த ஒருவர் இருக்கையில் அமர்ந்தபடியே இறந்து கிடந்தார். உயிர் இழந்தவரின் பெயர் ஆசிபுல்லா அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காலை 8.10 மணிக்கு லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது, ஒவ்வொரு பயணிகளும் கீழே இறங்க ஆரம்பித்தனர். ஆனால், ஒருவர் மட்டும் நீண்ட நேரம் தனது இருக்கையில் இருந்து எழாமல் இருந்தார். சந்தேகம் கொண்ட விமான சிப்பந்தியர்கள், அந்தப் பயணியுடன் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவரோ எந்த பதிலும் அளிக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்களை அழைக்க, விமானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்தப் பயணியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இறந்துபோன பயணி தனது இருக்கை பெல்ட்டை அவிழ்க்காமல் இருப்பதை பார்க்கும்போது, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால், அவர் இறப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் கூறவில்லை. ஒருவேளை விமானத்தில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டாரா? இல்லையென்றால் மாரடைப்பு அல்லது வேறு ஏதாவது உடல்நலப் பிரச்சனைகளால் இறந்து போனாரா போன்ற சந்தேகங்கள் எழாமல் இல்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே பயணியின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து போலீசார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பு இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதா என தெரியவில்லை.
இதையும் படிக்க: “எனது வாகனத்தில் ரொமான்ஸ் செய்யாதே! இது OYO அல்ல”: வைரலாகும் பெங்களூரு கேப் டிரைவரின் எச்சரிக்கை படம்…
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில், டெல்லி விமான நிலையத்தில் 82 வயது பெண் பயணி ஒருவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. விமானத்தில் ஏறுவதற்கு வசதியாக அவர் பயணம் செய்ய இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சக்கர நாற்காலி ஒன்றையும் அவரது உறவினர்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், விமான நிறுவனமோ சரியான நேரத்தில் சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யத் தவறியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அவர் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் செல்ல வேண்டியிருந்ததாகவும், சக்கர நாற்காலியை முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்ததாகவும் கூறினர். இருப்பினும், விமான நிலையத்திற்கு வந்தவுடன், ஏர் இந்தியா ஊழியர்களால் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை.
இதையும் படிக்க: விண்வெளியில் தொடர்ந்து 7 மணி நேரம் நடந்து ஆய்வுப் பணி.. சீன வீரர்கள் பூமிக்கு திரும்புவது எப்போது?
இது தொடர்பாக, குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், “நோய்வாய்ப்பட்ட பயணியை சக்கர நாற்காலிக்காக ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தோம் என்று எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை” என்றும் கூறியுள்ளது.
Lucknow,Uttar Pradesh
March 22, 2025 8:23 PM IST


