Last Updated:
தயாநிதி மாறன் குற்றச்சாட்டு செய்தியில் உண்மை இல்லை என்று சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. குற்றச்சாட்டின் மூலம் சன் குழுமத்தின் அன்றாட நிகழ்வுகளில் எவ்வித தாக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சன் தொலைக்காட்சி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
சன் குழும சொத்துக்களை பெருமளவில் கைப்பற்றிவிட்டதாக தொழிலதிபர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு அவரது சகோதரரும், எம்.பி.யுமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியானது. குறிப்பாக, சுமார் 2,500 முதல் 3,000 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை குறைந்த விலைக்கு ஐபிஓ வெளியிட்டு, 10 ரூபாய் முக மதிப்பு என்ற அடிப்படையில் 12 லட்சம் பங்குகளை கலாநிதி மாறன் தனக்கு ஒதுக்கிக் கொண்டதாகவும் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியதாக கூறப்பட்டது.
சன் குழுமத்தின் பங்குகள் ஒதுக்கீட்டை கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு மாற்ற வேண்டும் என தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு சன் குழுமம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், குற்றம் நடந்ததாக கூறப்படும் 22 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் நிறுவனம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் என்ற நிலையில் இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டு தொடர்பான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் யூகத்தின் அடிப்படையில் வெளியானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அந்த குற்றச்சாட்டின் மூலம், சன் குழுமத்தின் அன்றாட நிகழ்வுகளில் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம், தங்கள் குடும்பப் பிரச்னை குறித்தான குற்றச்சாட்டு முற்றிலும் தனிப்பட்டது என்றும் சன் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
June 20, 2025 3:45 PM IST


