Courtesy: Thavaseelan
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலயப் பிரிவிற்குட்பட்ட தமிழ்
மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால்
யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோட்டைக்கேணி
பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம்
ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய்
கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட
முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026இன்று
முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள்
தொடர்பில் கவனஞ் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
பூர்வீக வயல் நிலங்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவிலுள்ள
கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட
தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி
அதிகாரசபையினால் யானைவேலி அமைப்புக்கும் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால்
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய
நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுயானைகளிடமிருந்து
பாதுகாப்பபைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும்
வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதன்போது கூறப்படுகிறது.
அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் காணிகளையும்
ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின்
குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை
முன்னெடுத்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள்
நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகாவலி அதிகாரசபைதொடர்பில் குற்றச்சாட்டொன்றும்
முன்வைக்கப்பட்டிருந்தது.
ஒருங்கிணைப்புக் குழு
அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்திய கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி
பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து
உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நாடாளுமன்ற
உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் 23.02.2026இன்று கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு
பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற
உறுப்பினர் ரவிகரன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு
மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
குறிப்பாக கோட்டைக்கேணியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம்
அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதயைும்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம்
சுட்டிக்காட்டினார்.
அத்தோடு குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்
நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கமக்கார அமைப்பினால் தமக்கு கோரிக்கை
கடிதம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டசெயலாளர்,
இவ்விடயங்கள் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவுந்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

