Last Updated:
இந்திய தேர்தல் ஆணையம் மாநாட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் முதல் கட்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகள், யூனியன் பிரதேசத் தேர்தல் அதிகாரிகள், இந்திய தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த இரண்டு நாள் மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையர் கேட்டு தெரிந்துகொண்டார். அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார்.
இந்த மாநாட்டின் போது, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளது.
தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்னர் இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான தேதிகள் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறை தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றப்படும் எனவும் சொல்லப்படுகிறது. அதாவது 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2002 முதல் 2004 ஆண்டுக்கு இடையே நடைபெற்ற தீவிர திருத்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே ஏற்க முடியும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. ஆதார் அட்டையுடன் தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களில் ஒன்றை குடியுரிமை ஆவணமாக வாக்காளர்கள் வழங்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் குறித்து இரண்டு நாள் கூட்டத்தில் விரிவான ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நடத்தி உள்ளது.
October 23, 2025 6:05 PM IST


