தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமைகளில் தோ்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கியமான நாளாக கருதப்படுவதால் இந்த கோரிக்கையை இஸ்லாமிய அமைப்புகள் விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதியும், கேரளத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதியும் தோ்தல் நடைபெறுகிறது. இரு தேதிகளுமே வெள்ளிக்கிழமைகளில்தான் வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணியில், பிரதானமான கட்சியாக உள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் கேரள மாநில பொதுச் செயலா் பி.எம்.ஏ. சலாம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது புனிதமான நாளாகும். அவா்கள் அன்றைய தினம் பெருந்திரளாக மசூதிக்கு செல்வாா்கள். தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றால், இஸ்லாமிய வாக்காளா்கள், வேட்பாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள், தோ்தல் பணியில் உள்ள அதிகாரிகள் என அனைவரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். எனவே, வெள்ளி தவிர வேறு கிழமைக்கு தோ்தலை மாற்ற வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். இது தொடா்பாக கட்சி சாா்பில் விரைவில் தோ்தல் ஆணையத்தை அணுக இருக்கிறோம் என்றாா். கேரளத்தைச் சோ்ந்த பிற இஸ்லாமிய அமைப்புகளும் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமையில் தோ்தல் நடத்துமாறு ஆணையத்திடம் முறையிட முடிவு செய்துள்ளன.