சென்னை: “தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்,” என்று வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள விசாயிகளுக்கான கடன் தொடர்பான அறிவிப்புகள் இங்கே…
> தமிழக விவசாயிகளுக்கு, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் வழங்கப்படும், கடன் 2019-20-ல், 1.83 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2023-24ல் 3.58 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து வணிக வங்கிகள் வழங்கும் பயிர்க் கடனில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
> 2025-26 ஆம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப் பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கிட 22.80 கோடி ரூபாய் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
> அறுவடைக் காலங்களில் வேளாண் விளைபொருட்களின் அதிக வரத்தால், ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பொருளீட்டுக் கடன் வசதியானது உழவர் உற்பத்தி நிறுவனங்கள் (FPO) விரிவுபடுத்தப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
> தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் ரூ.17,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
> கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான விவசாயிகளின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு 2025-26 ஆம் ஆண்டில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு மூலதனக் கடன் வழங்கப்படும்.
> கடந்த 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாய பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு, மொத்த பயிர்க்கடன் தள்ளுபடியான 12,110 கோடியே 70 லட்சம் ரூபாயில், தற்போதுவரை, தள்ளுபடித் தொகையாக 10,336 கோடியே 40 லட்சம் ரூபாயும், தள்ளுபடித் தொகை மீதான வட்டியாக 90 லட்சம் ரூபாயும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26 ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கென 1,477 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> மீன்வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, மீன்வியாபாரம் போன்ற சுயதொழில்களை மேற்கொள்ள 10,000 மீனவர் மற்றும் மீனவ உழவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திடும்.
> > ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். வாசிக்க > தமிழக வேளாண் பட்ஜெட் 2025 ஹைலைட்ஸ்: உழவர் நல சேவை மையங்கள் முதல் சூரியசக்தி பம்பு செட் வரை!