கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான போட்டி கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.
இஷான் கிஷன் 125, சாஹில் ராஜ் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜார்க்கண்ட் அணி 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 247 பந்துகளில், 15 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 173 ரன்களும், சாஹில் ராஜ் 183 பந்துகளில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் தமிழக அணி சார்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த தமிழக அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை கொத்தாக சரிந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே பாலசுப்ரமணியன் சச்சின், சாஹில் ராஜ் பந்தில் போல்டானார். கேப்டன் நாராயண் ஜெகதீசன் 3 ரன்களில் ஜத்தின் பாண்டே பந்தில் வெளியேறினார். தொடர்ந்து பிரதோஷ் ரஞ்ஜன் பால் (9), ஆந்த்ரே சித்தார்த் (2) ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பினார் ஜத்தின் பாண்டே.
பாபா இந்திரஜித் ரன் ஏதும் எடுக்காமல் போல் டானார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 11 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. அம்ப்ரிஷ் ரன் ஏதும் எடுக்காமலும், ஷாக் கான் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி.