அதிகரித்து வரும் டிஜிட்டல் மாற்றம், வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகள் மற்றும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கடன் வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக கடன் வழங்குதல், குறிப்பாக தனிநபர் கடன் விநியோகம் முன்பை விட அதிகரித்து வருகிறது. இது தனிநபர்களின் கடன் தகுதி மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன்களின் முகியத்துவத்தை எடுத்துக்காடுகிறது. ஏனெனில் உறுதியான கடன் சுயவிவரம் இல்லாமல், புதிய கடன்களை அவ்வுளவு எளிதில் யாரும் பெற முடியாது.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருந்தால், அது உங்கள் நிதி ஒழுக்கத்தை பிரதிபலிப்பதோடு நீங்கள் கடன் வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. இது வங்கிகளுக்கு சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை உறுதிசெய்வதோடு, குறைவான வட்டி விகிதங்களுடன் அதிக தொகைக்கான தனிநபர் கடன்கள் கிடைக்க வழிவகை செய்கிறது என்கிறார் ஃபினோகிராட் டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் அபிஜித் பால்.
கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். கடன் வாங்குபவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் எவ்வளவு பொறுப்பானவர் மற்றும் நம்பகமானவர் என்பதை இது குறிக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள் 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர்களை சிறந்ததாகக் கருதுகின்றன. இது விரைவான ஒப்புதல்களை மட்டுமல்லாமல் குறைந்த வட்டி விகிதங்கள், பெரிய கடன் தொகைகள், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலங்கள் மற்றும் விரைவான டிஜிட்டல் விநியோகங்களையும் வழங்குகிறது.
உதாரணமாக, உங்கள் கிரெடிட் ஸ்கோர் 780-க்கு அருகில் இருந்தால், ரூ.10 லட்சம் வரை தனிநபர் கடன்களை எளிதான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளுடன் 9.99% லிருந்து தொடங்கும் வட்டி விகிதத்தில் பெறலாம். அதேசமயம், 640-க்கு அருகில் கிரெடிட் ஸ்கோர் உள்ள நபர்கள் தனிநபர் கடன்களைப் பெறுவது கடினமாக இருக்கலாம். ஒருவேளை இவர்கள் கடனைப் பெற்றாலும், கடுமையான விதிமுறைகளுடன் 15% க்கும் அதிகமான வட்டி விகிதங்களுடன் சிறிய தொகையை மட்டுமே பெற முடியும்.
மேலும், கடன் வாங்கும் நாம் ஒருசில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குறுகிய காலத்திற்குள் அதிக கடன் விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது போன்ற அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் செலுத்தும் மொத்த மாத தவணை தொகை உங்கள் மொத்த மாத வருமானத்தில் 40% ஐ தாண்டக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தனிநபர் கடன்களின் இஎம்ஐ தொகை மற்றும் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.
கடன் பயன்பாட்டு விகிதம் 30% க்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீண்ட கால திருப்பிச் செலுத்தும் வரலாற்றைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கிரெடிட் ரிப்போர்ட்டில் ஏதாவது தவறுகள் இருந்தால், அதை உடனடியாக மறுபரிசீலனை செய்து மேம்படுத்தவும்.
கடன் வழங்கும் நிறுவனங்களிடையே போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், உறுதியான கடன் விவரங்கள் மற்றும் அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் நபர்கள் மிகவும் இலாபகரமான வட்டி விகிதங்களில் அதிக தொகையிலான தனிநபர் கடன்களை எளிதாகப் பெற முடியும். இதை வைத்து உங்களின் திருமணம் அல்லது வீடு கட்டுதல் அல்லது மருத்துவச் செலவுகள் அல்லது கல்வித் தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்ய முடியும்.
October 19, 2025 11:39 AM IST

