Tamilnadu
oi-Vishnupriya R
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்றைய தினம் அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு சம்பவங்களால் கல்லூரி மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி நடந்து வருகிறது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இங்கு cyber security, Artificial Intelligence, Data Science, AI with Machine Language, EEE, ECE, Civil, Computer Science உள்ளிட்ட படிப்புகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலமாகவும் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள்.
அந்த வகையில் பூந்தமல்லியைச் சேர்ந்த ஷெரின் (19), அந்த தனியார் கல்லூரியில் ஏ.ஐ.எம்.எல். இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது தந்தை சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், தாயார் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஷெரின், நண்பர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இது தொடர்பாக பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தாயார், ஷெரினை கடிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷெரின், நேற்று முன் தினம் கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தார்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமே அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
அதே கல்லூரியில் இசிஇ இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19), நேற்று மதியம் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தார். இதில் மாணவரின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அந்த மாணவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மாணவர் சசிதரன் கல்லூரிக்கு சரிவர வருவதில்லையாம். இதனால் வருகை பதிவு மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கல்லூரி பேராசிரியர் சசிதரனிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது திடீரென வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இது போன்று அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் கல்லூரி மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இரு சம்பவஹ்கள் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

