Last Updated:
Synthetic Running Track| மாணவர்களின் விளையாட்டை ஊக்குவிக்க புதிய விளையாட்டு அரங்கம். 7 கோடி ரூபாய் மதிப்பில் பயன்பாட்டுக்கு வந்த நவீன மைதானம்.
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அன்னை சத்யா, மாவட்ட விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள தஞ்சை மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளின் பயிற்சி மையமாகவும், நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டு இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட, மாநில அளவிலான நடைபெறும் போட்டிகளுக்காகவும், மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், 7 கோடி மதிப்பில் செயற்கை ஓடுதளம் மற்றும் புல்வெளி கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டிற்கான ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையமும் துவங்கப்பட்டது. இதனை மே 5-ந்தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட், தடகள வீரர்கள், பயிற்றுனர்கள், வீரர், வீராங்கனைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

