தங்கம் விலை மேலும் குறையுமா? மத்திய அரசு இந்த ஒரு முடிவு எடுத்தா போதும்..!!
ஈரான் போர் இந்திய பொருளாதாரத்தில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மாத காலத்திற்கும் மேலாக ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரவில்லை. கச்சா எண்ணெய் வரத்து நின்று போனதால் இந்தியா அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
கச்சா எண்ணெய் வாங்கவே இந்தியா தன் கைவசம் இருக்கும் அமெரிக்க டாலரை அதிக செலவு செய்ய வேண்டி இருந்தது. அது மட்டுமில்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவடைந்து வண்ணமே இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்க நகைகள் வாங்குவதை தள்ளிப் போட வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் மட்டுமில்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களையும் கூட வெளிநாடுகளில் இருந்து தான் பெருமளவு இறக்குமதி செய்கிறது. இவற்றுக்கும் நாம் அமெரிக்க டாலரை பயன்படுத்துகிறோம். இதனால்தான் அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய்க்கு டாலர் வேண்டும் என்பதால் மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
மத்திய அரசும் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. மே மாதம் 13ஆம் தேதி அன்று மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான வரியை 6%-லிருந்து 15% ஆக உயர்த்தியது. இதனால் தங்கம் விலையும் உயர்ந்தது. இறக்குமதி வரி உயர்ந்த பிறகு, இந்தியாவில் தங்கம் இறக்குமதி கணிசமாக குறைந்தது. இதனால் கைவசம் அமெரிக்க டாலரை சேமித்து கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல், டீசலாக மாற்றி விற்க பயன்படுத்தப்பட்டது.
இப்போது ஈரான் போர் முடிவுக்கு வந்து அமெரிக்காவும் ஈரானும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. அந்த வழியாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கப்பல் மூலம் வந்த வண்ணம் இருக்கிறது. உலக சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது.
ஈரான் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமாக கூறி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திய மத்திய அரசு நிலைமை சீரடைந்து விட்டதால் உயர்த்திய வரியை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த சூழலில் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியை அரசு குறைக்க வாய்ப்புள்ளதாக கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் அனிந்தியா பானர்ஜி கூறுகிறார்.
சிஎன்பிசிக்கு பேட்டி அளித்துள்ள அவர் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு தற்காலிகமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக தான் கொண்டு வரப்பட்டது என்பதால் விரைவில் வரி குறைக்கப்படும் என கணிக்கிறார். தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் தங்கம் விலையும் குறையும் என்பதால் மக்கள் மத்திய அரசின் இந்த ஒரு நடவடிக்கைகாக எதிர்பார்த்துள்ளனர்.

