சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.64,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.
இதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,065, ஒரு பவுன் ரூ.64,520 என விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.55 என பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120, ஒரு பவுன் ரூ.64,960 என உயர்ந்தது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது.
24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,858, ஒரு பவுன் ரூ.70,864 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.110 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1.10 லட்சமாகவும் இருந்தது.