“கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.
அதனால், தேசத்தின் நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிருங்கள்” என்று நேற்று இந்தியப் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
மோடியின் இந்தப் பேச்சு நிச்சயம் இந்தியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். காரணம், இந்தியர்களின் வாழ்வோடு ஒன்றியுள்ள மிக முக்கிய உலோகம், “தங்கம்’.
அந்தத் தங்கத்தை வாங்காதீர்கள்… அதுவும் ஓராண்டிற்கு என்றால், அதிர்ச்சியைக் கேட்கவா வேண்டும்.

இதில் அதிர்ச்சியைத் தாண்டி நிறைய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
ஈரான் போர் இப்போதைக்கு முடிவதாக இல்லை. ஹார்முஸ் ஜலசந்தியையும் திறப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றித்தான் அந்தப் போரே போய்க்கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் ஏற்றி வந்த பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தி வாயிலிலேயே நின்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் போர் முடிந்தாலும் அந்தக் கப்பல்கள் வந்து சேர 2-3 நாள்கள் ஆகும்.
இரண்டு, மூன்று நாள்கள் என்று அசால்டாக நினைத்துவிட வேண்டாம். போர் முடிந்து ஹார்முஸ் ஜலசந்தி திறந்ததுமே, அத்தனை கப்பல்களும் எளிதாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துவிட முடியாது.
போக்குவரத்தைச் சரிசெய்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கப்பல்களின் பயணம் சீர்செய்யப்படும்.

