தங்கம் மீது இவ்வளவு ஆர்வமா? கார்ப்ரேட்-களின் புது டார்கெட்.. டாடா, கோத்ரேஜ் போலவே பிர்லா குழுமம் வந்துட்டாங்க
இந்தியா முழுவவதும் தங்க கடன் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருவது மட்டுமல்லாமல் நிதி நிறுவனங்களுக்கு முக்கிய ரீடைல் வர்த்தக பிரிவாகவே மாறியுள்ளது. அதேபோல் இத்துறையில் போட்டி என்பது மிகவும் குறைவாக உள்ளது. இதை உணர்ந்த பெரிய பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் புதிதாக நுழைய தயாராகி வருகிறது.
தங்க நகை கடன் பிரிவில் NBFC-களின் பங்கு மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில் இப்பிரிவில் முத்தூட் ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகியவை மட்டுமே நாடு முழுவதும் பெரும் ஆதிக்கம் செய்து வருகிறது. இதுவும் வர்த்தக சந்தையில் பெரிய இடைவெளியாகவே பார்க்கப்பட்டது.

இந்திய குடும்பங்களின் கையில் சுமார் 30000 டன்னுக்கும் அதிகமான தங்கம் இருக்கும் வேளையில், இது எளிய மற்றும் விரைவாக பணம் ஈட்டும் கருவியாக தங்க கடன் இருக்கும் காரணத்தால் மக்கள் பர்சனல் லோன் வாங்குவதை காட்டிலும் அதிகளவில் தங்க நகை கடனை வாங்கி வருகின்றனர்.
இதேவேளையில் தங்கம் விலை கிராமுக்கு சுமார் 15000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ள காரணத்தால் மக்களின் சிறிய தேவைகளுக்கு அதிகளவிலான பணம் இதில் இருந்து கிடைக்கிறது. இதனால் தென்னிந்தியாவை தாண்டி தற்போது வட இந்தியாவிலும் தங்க நகை கடனுக்கான சந்தை மிகப்பெரியதாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த 2-3 மாதத்தில் டாடா கேப்பிடல் மற்றும் கோத்ரேஜ் கேப்பிடல் போன்றவை இத்துறையில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களை கைப்பற்றி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆதித்யா பிர்லா கேப்பிடல் லிமிடெட் நிறுவனம் புதிதாக தங்க நகை கடனில் இறங்குவதாக அறிவித்துள்ளது.
ஆதித்யா பிர்லா கேப்பிடல் இப்பிரிவு வர்த்தகத்திற்காக அடுத்த 3 வருடத்தில் 1000 கிளைகளை திறக்க திட்டமிட்டு உள்ளது ஆதித்யா பிர்லா கேப்பிடல். முதல் கட்டமாக மார்ச் 2027க்குள் சுமார் 300 தங்க நகை கிளைகளை முக்கிய வர்த்தக பகுதியில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
NBFC நிறுவனமான ஆதித்யா பிர்லா கேப்பிடல் ஏற்கனவே ரீடைல், MSME கடன்களை அளித்து வரும் வேளையில் இதன் உடன் கூடுதல் சேவையாக தங்க நகை கடன்களை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3 சதவீதம் வரையில் உயர்ந்து 407 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் டாடா கேப்பிடல், கோத்ரேஜ் கேப்பிடல் வரிசையில் ஆதித்யா பிர்லா கேப்பிடல் இணைந்துள்ளது. ஜூலை மாதம் டாடா கேப்பிடல் நிறுவனம் கேரள மாநிலத்தை சேர்ந்த Yogakshemam Loans Ltd நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றியுது மூலம் தங்க நகை கடன் பிரிவில் நுழைந்தது.
இதேபோல் ஜூலை மாதம் Kanakadurga Finance நிறுவனத்தில் கோத்ரேஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் வாயிலாக பெரும் பகுதி பங்குகளை வாங்கி கோத்ரேஜ் கேப்பிடல் தங்க நகை கடன் பிரிவில் நுழைந்தது. ஆனால் ஆதித்யா பிர்லா கேப்பிடல் நிறுவன கைப்பற்றல், பங்கு கொள்முதல் மூலம் இத்துறைக்குள் வராமல் நேரடியாக இத்துறை சேவையில் இறங்கியுள்ளது.

