Last Updated:
Remittance Tax: அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பும் NRI-களுக்கு இது கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை அவர்கள் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் இந்தியர்களின் வருமானம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்புவதற்கு தற்போது எந்த வரியும் கிடையாது. அதன்படி, ஒரு இந்தியர் தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை அமெரிக்காவில் இருந்து தனது குடும்பத்திற்கு அனுப்பினால், முழுப் பணமும் அப்படியே வந்து சேரும். இதற்கு, எந்த வரியும் கேட்பதில்லை. ஆனால், தற்போது டிரம்ப் நிர்வாகம் வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ (One Big Beautiful Bill) என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதில் அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு 3.5% கலால் வரி விதிப்பும் அடங்கும். இதனால், அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பும் NRI-களுக்கு இது கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இந்த மசோதா சட்டமாக மாறினால், ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தற்போது வரை செனட்டில் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
2024ஆம் ஆண்டிற்கான உலக வங்கி தரவுகளின்படி, இந்தியா ஆண்டுதோறும் சுமார் 129 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணம் அனுப்புகிறது. அதில் 28% (சுமார் $33 பில்லியன்) அமெரிக்காவில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள வரி இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் 10 முதல் 15% குறைப்புக்கு வழிவகுக்கும் என்றும், இதனால் ஆண்டுதோறும் $12-18 பில்லியன் இழப்பு ஏற்படக்கூடும் என்றும் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி கூறியுள்ளது. ஒரு NRI இந்தியாவிற்கு ரூ.83,000 (சுமார் $1,000) அனுப்பினால், அவர் சுமார் ரூ.2900 வரி செலுத்த வேண்டும். சொத்து வாங்குதல் அல்லது கல்விக்காக $10,000 அனுப்புவது போன்ற பணப் பரிமாற்றங்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்படும்.
NRI-கள் மற்றும் விசா வைத்திருப்பவர்கள் மீதான தாக்கம்
இந்த வரி H-1B, L-1, F-1 விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் போன்ற அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்குப் பொருந்தும். ஏற்கனவே வருமான வரி செலுத்திய பிறகு, NRI-கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு கூடுதலாக 3.5% வரி செலுத்த வேண்டும்.
இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம்
உலகம் முழுவதும் அதிகளவில் பணம் அனுப்பும் நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த வரி நடைமுறைக்கு வந்தால், கல்வி, சுகாதாரம் போன்றவை பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை போன்ற துறைகளும் பாதிக்கப்படலாம். இதேபோன்று, நாணய மதிப்பிழப்புக்கான வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
June 04, 2025 10:59 AM IST
ட்ரம்ப் கொடுத்த அடுத்த ஷாக்.. இனி இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் வரி? மசோதாவால் இந்தியர்கள் பீதி!


