உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் மோதி வருகின்றன.
இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று குரூப் டி பிரிவில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கின் நாசோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் வலிமையான பந்துவீச்சுக்கு முன்னால் நெதர்லாந்து அணியால் தாக்குபிடிக்க முடியவில்லை. நெதர்லாந்து அணியின் சைப்ரான்ட் எஞ்செல்பெக்ட் 40 ரன்களும், வான் பீக் 23 ரன்களும் எடுத்தனர் மற்றவர்கள் சொற்ப இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணியினர் விளையாடினர். 4.3 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
இதனால் நெதர்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதன்பின்னர் அனுபவம் மிக்க டேவிட் மில்லருடன் இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 ரன்களில் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்க அடுத்து வந்த மார்கோ ஜேன்சன் 3 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கிய டேவிட் மில்லர், 19 ஆவது ஓவரில் 2 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்த தென்னாப்பிரிக்க அணி வெற்றி இலக்கை எட்டியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
