Last Updated:
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
அனைத்து நாடுகளையும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன் பார்க் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தற்போது டி20 போட்டிகள் பிரபலம் அடைந்து வருகின்றன. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் பல நாடுகள் டெஸ்ட் போட்டிகளை விடவும் டி20 போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. இதனை நடத்துவதற்கு செலவு குறைவு என்பதுடன் ஏராளமான பார்வையாளர்களும், ஸ்பான்சர்ஷிப்பும் கிடைப்பதால் டி20 போட்டிகள் களை கட்டுகிறது.
சர்வதேசப் போட்டிகளைத் தவிர்த்து ஐபிஎல், பிக் பாஸ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என்பது போன்ற டி20 லீக் தொடர்களும் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளன. இதில் பங்கேற்கும் திறமையான ஆட்டக்காரர்களுக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கிறது.
இதேபோன்று உலக அளவில் 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் அணி என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவை அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் அந்த அணிகளின் ஆட்டத்தின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் கிரீன் பார்க் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் இல்லாமல் போனால் அதிக அளவில் தீமை ஏற்படாது என்று கருதுகிறேன். அனைத்து நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. ஏனென்றால் பல நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள், கிரிக்கெட் வாரியங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன.
குறிப்பாக ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. எனவே இது போன்ற நாடுகளை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
August 13, 2025 7:59 PM IST


