Last Updated:
ஆடுகளத்தில் ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் சிரமப்படுவதாகவும், அவர் விரைவில் தனது ஓய்வை அறிவிக்கலாம் என்றும் முன்னாள் இந்திய வீரர் அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
தற்போது 4ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில், இங்கிலாந்து அணி 186 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தாலும் பந்துவீச்சு இந்திய அணியின் பலவீனமாகவே இருந்துள்ளது.
இந்த நிலையில், ஆடுகளத்தில் ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் சிரமப்படுவதாகவும், அவர் விரைவில் தனது ஓய்வை அறிவிக்கலாம் என்றும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “ஜஸ்பிரீத் பும்ரா மைதானத்தில் மிகவும் சிரமப்படுகிறார். அவர் பந்துவீச்சின் வேகமும் குறைந்துகொண்டே வருகிறது. தொடக்கத்தில் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசிக்கொண்டிருந்த அவர், தற்போது 130-135 கி.மீ வேகத்திலேயே பந்துவீசுகிறார்.-
அவர் ஃபீல்டிங் செய்யும்போதும், கேட்ச்களை பிடிக்கும்போதும் சிறப்பாகவே செயல்படுகிறார். அணியின் வெற்றிக்கு அவர் உதவ வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் மனம் ஒத்துழைப்பதைப் போல அவரது உடல் அவருக்கு ஒத்துழைப்பதில்லை. அவர் உடற்தகுதியை இழந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.
கிரிக்கெட்டின் மீது அவருக்கு அதே காதல் தான் உள்ளது. ஆனால் உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது. முதலில் விராட் கோலி வெளியேறினார். பிறகு ரோகித் சர்மா வெளியேறினார். அஸ்வினும் இல்லை. இனி பும்ரா இல்லாததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்னுடைய கணிப்புகள் தவறாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ஆனால் நான் பார்த்த வரையில், அவர் முழு உடற்தகுதியுடன் விளையாடுவதைப் போல தெரியவில்லை” எனக் கூறினார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியின்போதும் முதுகுவலியால் அவதிப்பட்ட பும்ரா, 3 மாத காலம் ஓய்வில் இருந்தார். இதனால் அவர் சாம்பியன்ஸ் கோப்பையில் கூட பங்கேற்க முடியவில்லை.
தற்போது இங்கிலாந்து தொடரிலும், 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த காரணங்களால், அவர் உடற்தகுதியை இழந்து வருகிறாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படுகிறது.
July 26, 2025 1:36 PM IST


