சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய நபரின் இலக்காகக் கூறப்படும் எரான் ஹயா, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கொலைக்காக கைது செய்யப்பட்டவர் என்று அறியப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் செய்தி இணையதளத்தின்படி, இந்த மாத தொடக்கத்தில் டெல் அவிவில் ஷாலோம் அவிட்டன் என அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய நபரின் வீட்டில் கையெறி குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹயா மலேசியா வந்தார்.
மற்றொரு இஸ்ரேலிய செய்தி இணையதளமான ஹாரெட்ஸின் படி, ஹயா 2004 இல் மெக்ஸிகோவில் ஒரு கொலைக்காக கைது செய்யப்பட்டார். அப்போது ஹயா கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 23. தி ஜெருசலேம் போஸ்ட்டின் கூற்றுப்படி, டிசம்பர் 2004 இல் மெக்ஸிகோவின் கான்கன் நகரில் ஒரு போலீஸ்காரராக மாறிய கும்பல் கொலையாளியைக் கொன்றதாக ஹயா சந்தேகிக்கப்பட்டார்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஹயா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்லும் வரை போலீஸ் கண்காணிப்பில் இருந்தார். போலீஸ் ஆதாரங்களின்படி, அமெரிக்காவில் வளர்ந்த ஹயா, தனது 16 வயதில் தனது தந்தையுடன் இஸ்ரேலுக்குத் திரும்பினார். அந்த நேரத்தில் அவர் இஸ்ரேலிய குற்றவியல் பாதாள உலகில் தீவிரமாக செயல்பட்டார்.
பல கும்பல் தாக்குதல்கள் மற்றும் கொலை முயற்சிகளில் அவர் தேடப்படுவராக இருந்தார். இருப்பினும் அவருக்கு எதிரான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அவருக்கு பரினியன் மற்றும் முல்னர் குற்றக் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது.
இந்தக் குடும்பங்களில் ஒன்று முஸ்லி சகோதரர்களின் குற்றக் குடும்பத்துடன் வன்முறைப் பகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மார்ச் 27 அன்று கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவிட்டன் பிடிபட்டார். அவர் பிரெஞ்சு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியா வந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் போலீஸ் விசாரணையைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
குடும்பத் தகராறு காரணமாக சக இஸ்ரேலியரை படுகொலை செய்வதற்காக மலேசியா வந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், அவிட்டன் ஒரு வெளிநாட்டு உளவுத்துறை முகவராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை போலீசார் நிராகரிக்கவில்லை என்பதோடு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.