மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இந்தியாவின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றத் தடுப்புக்காவலை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை நீடித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமுலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை அழைப்பாணை அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த அழைப்பாணையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதனிடையே, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ஆம் திகதி இரவு அமுலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரின் நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் உள்ள அவர் நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரது நீதிமன்ற காவலை நீடிக்கவேண்டுமென அமுலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை 23 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
The post டெல்லி முதலமைச்சரின் தடுப்புக்காவல் நீடிப்பு appeared first on Thinakaran.

