Last Updated:
டெல்லி குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன், பாகிஸ்தான் ராணுவ மருத்துவர் பர்வேஸ் உல் ஹாசனுடன் லிங்க்ட்இன் மூலம் தொடர்பில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி நடந்த பயங்கரவாத கார் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த வழக்கில் மருத்துவர்கள் முசம்மில், ஆதில், ஷாஹீன் சயீத் உள்ளிட்ட பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் காஷ்மீர் மருத்துவர் டாக்டர் உமர் முகமது என்ற உமர் உன்-நபி அந்தக் காரை ஓட்டிச் சென்றதும், இந்த வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியாகியிருப்பதும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீன் பற்றி அதிர்ச்சிகர தகவல்கள் நியூஸ்18 குழுமத்திற்கு கிடைத்துள்ளது. ஷாஹீன், பாகிஸ்தான் ராணுவ மருத்துவருடன் தொடர்பில் இருந்துள்ளார் எனும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஷாஹீன், லிங்க்ட்இன் எனப்படும் சமூகவலைதளத்தில் பல வெளிநாட்டு கணக்காளர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்தியா, சவுதிஅரேபியா மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கும் ஷாஹீன், பாகிஸ்தான் ராணுவ மருத்துவர் ஒருவருடனும் தொடர்பில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது லிங்க்ட்இன் கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் பாகிஸ்தான் ராணுவ மருத்துவரான பர்வேஸ் உல் ஹாசன் என்பவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. பர்வேஸ் உல் ஹாசன் லிங்க்ட்இன் கணக்கில் கிடைக்கும் தகவலின்படி, அவர் 2022 முதல் பாகிஸ்தான் இராணுவத்தால் இயக்கப்படும் CMH (ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவமனை) லாகூர் மருத்துவக் கல்லூரியில் தேர்வுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு, அவர் ஜூன் 2017 முதல் ஜூலை 2022 வரை ஐந்து ஆண்டுகள் பஹாவல்பூரில் உள்ள CMH மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (CIMS) கல்வி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இது பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான ஆதரவின் கீழ் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஷாஹீன், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத்-உல்-மோமினாத்தில், படிக்கும் பெண்களைச் சேர்க்க பணியாற்றியதாக புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இந்த அமைப்புக்கு ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரி சாதியா அசார் தலைமை தாங்குவதாக கூறப்படுகிறது.
டாக்டர் ஷாஹீன் சயீத்தின் லிங்க்ட்இன் தொடர்புகள், குறிப்பாக பஹாவல்பூரில் பணியாற்றிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரியின் ஒப்புதல், பஹாவல்பூரில் தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமதுவுடனான அவரது தொடர்புகள் ஆகியவை எல்லை தாண்டிய தொடர்புகளை மேலும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் புலனாய்வாளர்கள் அவரது ஆன்லைன் செயல்பாட்டை இன்னும் உன்னிப்பாக ஆராய வழிவகுத்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
November 13, 2025 6:37 PM IST
டெல்லி குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் ராணுவ மருத்துவருடன் ஷாஹீனுக்கு தொடர்பு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்


