டெல்லியில் பதற்றம்: கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி..!!
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆதரவாளார்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (cockroach Janata party) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கூட இருப்பதால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவித்தனர். இதனை அடுத்து டெல்லியில் நாடாளுமன்றத்தை சுற்றி மத்திய அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஜந்தர் மந்தர் பேரணியில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் வருகை தந்த வண்ணம் உள்ள நிலையில் சில மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டு விட்டன.
ராஜீவ் சவுக், ஜன் பத், படேல் சவுக், மத்திய செயலகம் மற்றும் சேவா தீர்த் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும் தடுத்து நிறுத்தினர்.
#WATCH | Delhi | Protesters gathered for CJP’s protest march clash with RPF personnel at Jantar Mantar; RPF personnel & police use lathis for crowd control pic.twitter.com/gijaCjJksW
— ANI (@ANI) July 20, 2026
அப்போது தடை மீறி செல்ல முயன்ற இளைஞர்கள், மாணவர்கள் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலையில்லாமல் எப்போதும் போன் பார்த்து கொண்டிருக்கும் இளைஞர்கள் கரப்பான் பூச்சி போன்றவர்கள் என நீதிபதி ஒருவர் தெரிவித்த கருத்தால் அதிருப்தி அடைந்து சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்டது தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. தற்போது தலைநகர் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தும் அளவுக்கு இளைஞர்கள் ஆதரவை பெற்றுள்ளது. இந்த இளைஞர்கலுக்கு பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்த வகையில் நீட் தேர்வு முறைகேடு, கல்வி கட்டமைப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மாற்றம் வேண்டும் என இந்த இளைஞர்கள் தொடங்கிய சிறு போராட்டம் இன்று பெரியதாக உருவெடுத்துள்ளது.
