இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என தகவல் வெளியானது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து, பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வரவேற்றது. அதன்படி, ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில், தற்போது கவுதம் கம்பீரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. ஆரம்பத்தில் இருந்து வலுவாகவே இருந்த கொல்கத்தா அணி, இறுதி வரை பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால், அந்த அணி கோப்பையை கைப்பற்றியதில் யாருக்கும் பெரிதாக ஆச்சரியம் இல்லை. இப்படி எல்லா வகையிலும் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீர் தான் காரணம் என கொல்கத்தா அணி வீரர்களும், நிர்வாகிகளும் பலமுறை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகத்தில் இருக்கும் பலரும் கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க ஆதரவு தெரிவித்ததோடு, முன்னாள், இன்னாள் வீரர்களும் அவரது பெயரையே பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கவுதம் கம்பீர் தவிர்க்க முடியாத நபராகிவிட்டதால், அவர்தான் அடுத்த பயிற்சியாளர் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இது குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)