Last Updated:
வங்கதேசம் டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த கோரிக்கை வைத்தது, பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது, ஐசிசி முடிவெடுக்க உள்ளது, ஸ்காட்லாந்து மாற்றாக சேரலாம்.
டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்க தேசத்தின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் ஆதரவளித்துள்ளது.
வங்க தேத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள், இருநாடுகள் இடையே மோதல் போக்கை உருவாக்கி உள்ளது. அதன் எதிரொலியாக ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்க தேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை லீக் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து வருகிறது. இந்தியாவில் நடைபெற உள்ள தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்க தேசம் வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து ஐசிசி இன்று முடிவெடுக்க உள்ள நிலையில், வங்கதேசத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில், வங்கதேச அணியின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது.
வங்கதேசம் சம்பந்தப்பட்ட போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாகவும் வங்க தேசத்தின் கோரிக்கையை ஐசிசி ஏற்கமறுத்தால் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்றும் கூறப்படுகிறது. மற்றொருபுறம், வங்கதேசம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படலாம் என ஐசிசி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Jan 21, 2026 12:57 PM IST
டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும்.. வங்க தேசத்தின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் ஆதரவு!


