நீதிதேவதை சிலை
உலக வரலாற்றில் முதல்முறையாக நீதிதேவதை சிலையின் கண்கட்டை அவிழ்த்துவிட்டுச் சீர்திருத்தம் செய்திருக்கிறார் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட்.
இந்திய நீதித்துறையில் காலனித்துவ முறையை மாற்றும் வகையில் குற்றவியல் சட்டங்களுக்கு பெயர்களை மாற்றி திருத்தம் கொண்டுவந்ததை போன்று, தன் பங்குக்கு நீதி தேவதை சிலையில் திருத்தங்களை கொண்டுவந்தார் டி.ஒய். சந்திரசூட்.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய புதிய ‘நீதி தேவதை’ சிலையை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திடீரென்று ஒருநாள் திறந்துவைத்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கத்திடம் கலந்தாலோசனையோ தகவலோ பகிரப்படவில்லை என்பது மூத்த வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு.
நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.
மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியைத் தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.
உலக நாடுகள் பெரும்பாலும், நீதிக்குரிய கிரேக்கக் கடவுளான இந்த ஜஸ்டிஸியாவின் சிலையைதான் நீதிக்கான சின்னமாக பின்பற்றுகிறார்கள்.
இத்தகைய சூழலில், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசனப் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புடவை, நெற்றியில் திலகத்துடன் இந்திய பாரம்பரிய தோற்றத்துடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கான காரணமாக, வாள் என்பது வன்முறையின் அடையாளம், ஆனால், நீதிமன்றங்கள் அரசியல் சட்டப்படி தீர்ப்புகளை வழங்குகின்றன, எனவே வாளுக்குப் பதிலாக அரசியல் சாசனம் என்று டி.ஒய்.சந்திரசூட் சொன்னதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திடீர் மாற்றத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கம் கொண்டுவந்த தீர்மானத்தில், “இந்த நாட்டின் நீதி நிர்வாகத்தில் வழக்குரைஞர்களுக்கும் இணையான பங்கிருக்கிறது. அதிரடியாகச் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது; அவர்களாகவே முடிவு செய்துகொண்டுவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

