Last Updated:
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புகின்றனர். நாசா அறிவிப்பின் படி, டிராகன் விண்கலம் புளோரிடா கடலில் தரையிறங்கும்.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வரும் பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்தது.
அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். எட்டு நாட்கள் ஆய்வுக்குப் பிறகு இருவரும் பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் தொடர்ந்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள மற்ற இரு விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக நான்கு பேர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அவர்களை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கைகுலுக்கி விண்வெளி நிலையத்திற்கு வரவேற்றனர்.
அதன்பின்னர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலனுக்குள் சென்றனர். இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் அடங்கிய குழு பூமி திரும்புவதற்கான பணிகள் இன்று காலை தொடங்கியது. டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நாளை அதிகாலை 2.41 மணியளவில் Deorbit பணிகள் நிறைவு பெறும் என்றும் டிராகன் விண்கலம் நாளை அதிகாலை 3.27 மணியளவில் புளோரிடா கடல் பகுதியில் தரையிறங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்க உள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 18, 2025 12:25 PM IST
டிராகன் விண்கலத்தின் அன்டாக்கிங் வெற்றி.. சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கும் நேரம் இதுதான்!


