எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், பெலாரஸ், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 2005 முதல் பார்வையாளராக இருந்த இந்தியா, 2017ல் உறுப்பு நாடாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா குறித்துப் பேசியிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்தியாவும், சீனாவும் நட்புநாடுகள். டிராகனும் யானையும் ஒன்றாக வருகின்றன. உலகம் இன்று மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. உலகின் பழமையான நாகரிகங்களாகவும், மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும் இருக்கும் இந்தியா மற்றும் சீனா இந்த மாற்றத்தின் மையத்தில் நிற்கின்றன.
இரு நாடுகளும் ‘குளோபல் சவுத்’ பகுதிக்கு உட்பட்டவை. சமநிலையான உலக ஒழுங்கை உருவாக்குவதற்கு பொறுப்பையும் இரண்டு நாடுகளும் கொண்டிருக்கின்றன. நம் இரு நாடுகளும் நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், ‘டிராகன்’ மற்றும் ‘யானை’ இணைந்து நடக்கும் போது, உலகம் ஒற்றுமையையும் வலிமையையும் காணும்.” என்று பேசியிருக்கிறார்.

